Saturday, February 25, 2006

நான் பிடிச்ச நான்கு ஆட்கள்

ஏதோ கம்முன்னு இருந்த நம்மை இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டவரு இந்த கொத்தனார் . ஒரே டென்சன் பார்ட்டி இந்த ஆளு. நம்மளை வேற வழிகாட்டி, டிராஃபிக் சிக்னல்-ன்னுட்டு என்னலாமே சொல்லி வேற விட்டாரு. வேற வழியே இல்லை. எதாவது ஒளறிக் கொட்டியே தீரணம். பகவான் விட்ட வழி.

நானிருந்த நாலு ஊர்கள்:
1. திருநெல்வேலி:
பிறந்தது வண்ணாரபேட்டேல. உயர் நிலைப்பள்ளி படித்தது ஹிந்து காலேஜ் ஹைஸ்கூல்லே. தாமிரபரணிலே திருட்டு குளி, சினிமா பாக்க வைத்திருந்த பைசாவே மூணு கார்ட்லே தொலைத்தது, பொது நூலகத்தில் பொன்னியின் செல்வன் படித்தது, தரை டிக்கெட்லே படம் பார்த்தது எல்லாம் இங்கதான். நாங்க இருந்த மாளிகை மாதிரி இருந்த மனை இப்போ ஒரு மருத்துவமனை!!

2. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்:
கல்லூரி வாழ்க்கையுடன் துவக்கம் மெட்ராஸ் (இப்போதான்யா சென்னை). தமிழ் மீடியத்தில் படித்தவன் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்ட இடம். முட்டை சாப்பிட, பீர் அடிக்க, திருட்டு சினிமா பார்க்க என்று கும்மாளமடித்த இடம்.

3. பம்பாய், இப்போதய மும்பய்:
ஏர் இந்தியாவில் வேலை கிடைத்தவுடன் ஒரு பொட்டியோடு வந்து, Paying guest accommodationல் வெங்கிடசாமியுடன் தங்கி, திருமணம் என்ற ஒரு ஆயுள் தண்டனை பெற்ற இடம் (வெங்கிடசாமியுடன் அல்ல ஸார்). முதல் இரண்டு வருடங்கள் பிடிக்காத, இப்போது பிரிய மனமில்லாத ஒரு அற்புத நகரம்.

4. பஹ்ரைன் (Bahrain):
பம்பாயில் வீடு வாங்கப் போய், தலைநிறைய கடன் வந்து, அதை தீர்ப்பதற்காக வேலை பார்க்க வந்த இடம். அரேபிய நாடுகளில் மிகவும் முற்போக்கான எண்ணம் கொண்ட இடமிது (1984ம் ஆண்டு). ஓரு சின்ன கிருட்டிணர் கோவிலுமுண்டு. நண்பர்கள் நிறைய கிடைத்த ஒரு இடம்.

செல்ல விரும்பும் நாலு இடங்கள்:
1. எகிப்து:
இந்நாட்டு சரித்திரம், பிரமிடுகள். ஸ்பின்க்ஸ், நைல் நதி எல்லாமே ஒருவரை பிரமிக்க வைக்கும். கூடிய சீக்கிரமே செல்வேன்.
2. கீரிஸ் (Greece):
இதுவும் சரித்திரப்புகழுக்காகவே.
3. இமயமலைப் பகுதிகள்:
புகைப்படத்திலும், நேஷ்னல் ஜியாக்ரஃபிக் சானலிலும் மட்டும் பார்த்தது. வயசானவர்கள் எல்லாம் போகக்கூடாது என்று சொல்வதற்குள் போய் வரணம்.
4. வெஸ்ட் இண்டீஸ்:
சிறந்த கடற்கரைகளும், அது சார்ந்த மிகச் சுவாரஸ்யமான விஷயங்களும் ;-)

பிடித்த நாலு காரியங்கள்:
1. குழந்தைகளுடன் (குறிப்பாக ஊணமுற்றவர்கள்) விளையாடுவது. Amazing way for relaxing.
2. இசை நன்கு தெரிந்தவர்களுடன் அளவளாவுதல்.
3. புதுப்புது பதார்த்தங்களை சமைத்து அதை அடுத்தவர்களை சாப்பிட வைத்து பார்ப்பது.
4. சனி, ஞாயிறுகளில், மதிய உணவிற்கு பிறகு போடும் ஒரு அமர்க்களமான தூக்கமும் அதன் பின் பருகும் ஒரு லோட்டா காப்பியும்.

பிடித்த நான்கு உணவு அயிட்டங்கள்:
1. சீஸ், (மஷ்ரூம் என்று ஆங்கிலத்தில் மருவப்படும்) நாய்க்கொடை போட்ட எந்த பதார்த்தமும்.
2. பெங்களூரிளுள்ள “Cosmo Village” என்ற இடத்தில் கிடைக்கும் fusion ஐயிட்டங்கள் (e.g. spicy thai curry with kerala parathas).
3. தயிர்சாதம் ஊறுகாயுடன்.
4. சுக்கு காப்பி (திருநெல்வேலி சங்க்சன் பெருமாள் கோவிலிலுள்ள அய்யர் கடையில் அமர்க்களமாக இருக்கும்)

நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்:
1. டி.எம்.கிருஷ்ணா:
மிகச்சிறந்த இளம் கர்னாடக இசைக்கலைங்கர். எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு நல்ல நண்பர், மனிதர்.
2.: மறைந்த எம் டி இராமநாதன்:
பிரமிக்க வைக்கும் திறன்கள் கொண்ட, எங்கேயோ இருக்க வேண்டிய, அதிர்ஷ்டம் அதிகமில்லாத, அற்புத கர்னாடக இசைப் பாடகர்.
3. எம் எஸ் விஸ்வநாதன்:
ஐம்பது வருடங்களாயினும், எல்லா பிரிவு மக்களையும் கவரும் பாடல்களை படைத்த ஒரு இசை மேதை.
4. Of course, கமலஹாஸன்:
எம் டி இராமநாதன் of தமிழ் திரையுலகம். எதைச் செய்தாலும் “அட” என்று சொல்ல வைப்பவர்.

பிடிக்காத நாலு அயிட்டங்கள்:
1. அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள். In general, our Indian traffic.
2. வள வளவென்று வாய்மூடாமல் சுயபுராணம் பேசும் ப்ரகஸ்பதிகள்.
3. சென்னை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள்.
4. முன்னில் புகழ்ந்து, பின்னால் குறை கூறுவோர்.

அழைக்க விரும்பும் நால்வர்:
(இந்த விளையாட்டுக்கு புச்சும்மா.. நாலு பேர் கிடைப்பாங்களா என்பது சந்தேகமே….)
1. கௌசிகன்
இவர் கொத்தனார் சொன்ன பிறகும் போடலை. அதனாலே மறுபடியும்.
2. கைப்புள்ள
எதோ நம்ம பதிவுலே ஒரு பிண்ணோட்டம் போட்டார் என்ற நன்றிக்காக
3. நிலா
இவர் நடத்துகிற விளையாட்டில் நம்மையும் சேர்த்திட்டார். அதனாலே ஹி ஹி ஹி.
4. Jayashree
நம்மளையும் நம்ம புதிர்களையும் மதிச்சு, அப்புதிர்களை விடுவித்ததற்காக

அவ்ளவுதான் சாமியோய்…..நம்மளை விட்டுடுங்கோ அய்யாமார்களே, அம்மாமார்களே…

Thursday, February 23, 2006

தாயுமானவரும் ஹாலிவுட்டும்

கீழே இருப்பது தாயுமானவரின் பாடல்.
'தேஜோமயானந்தம்' என்ற ஒரு கருத்தின் கீழுள்ள பல பாடல்களிலொன்று.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

குதிரை, மதயானையை வசமா நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேற யாரும் கண்டுக்காமே உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.

ஆனா, மிக்க கடினம் யாதெனில் (இங்கதான் ஒரு போடு போடறார், தாயுமானவர்) "மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது". உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே....

சும்மா பொத்திகினு இருக்கிறது ரொம்ப ரொம்ப கட்டம்ங்கிறாரு. இந்த ஒரு விஷயம் அந்த காலத்திலிருந்தே ஒரு கஷ்டமான காரியமாகத்தான் இருந்திருக்கு.

17ம் நூற்றாண்டிலேயே தாயுமானவர் சொன்னதையெல்லாம் இப்போ ஹாலிவுட்லே ஃபிலிம் காட்டிக்கினு இருக்காங்க. ஸ்டார் ட்ரெக், தி பிக் (big), இன்விஸிபிள் மான் அப்பிடின்னு கலாய்க்கிறானுங்க அவங்க.....

தாயுமானவருக்கு ஏதாவது ராயல்டி கொடுத்தானுங்களா?

Tuesday, February 21, 2006

ஏன் ஏன் ஏன்......

அது இல்லீங்கோ. சிவாஜி கணேசன், வஸந்தமாளிகை படத்தில் பாடும் "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாட்டில் வரும் "ஏன் ஏன் ஏன்" மாதிரியில்லை இது. மர்ஃபீஸ் லா என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, "ஏதேனுமொன்று தவறுமெனில் அது தவறியே தீரும்". வாழ்க்கையில் இந்த மர்ஃபீஸ் லா போன்றவை நம்மை பல முறை பாதித்திருக்குமே! கீழ் கண்டவைகள் ரொம்ப பரிச்சியமாக இருக்கோ?

1. ஒரே காரியத்திற்கு இரண்டு வரிசைகள் இருக்குமாயின், நாம் நிற்கும் வரிசை மட்டும் நத்தை போலூறுவது ஏன் ஏன் ஏன்?
2. கை எட்டாத இடத்திலேயே அதிகம் அரிப்பது ஏன் ஏன் ஏன்?
3. இடம்-வலம் காட்டும் கண்ணாடி, மேல்-கீழ் காட்டாதது ஏன் ஏன் ஏன்?
4. தொலைபேசியில் ராங் நம்பர்கள், என்கேஜ்டாகவே இருப்பதில்லையே ஏன் ஏன் ஏன்/
5. தவறாது தகராறு செய்யும் கார், மெக்கானிக் முன் நல்ல பிள்ளையாக் இருப்பது ஏன் ஏன் ஏன்?
6. ஒரு பெரிய சாவிக்கொத்தில், எப்போதும் கடைசியாக முயற்சி செய்யும் சாவியே பூட்டைத் திறப்பது ஏன் ஏன் ஏன்/
7. எந்த சாதனமும், க்யாரண்டி ப்ரீயட் முடிந்த மறுநாளே ரீப்பேராவது ஏன் ஏன் ஏன்?
8. இரண்டு இடத்திற்கு இடையேயுள்ள மிகவும் குறுக்கு வழி எப்பொதும் ரிப்பேராக இருப்பது ஏன் ஏன் ஏன்?

இது மாதிரி உங்களுக்கெதாவது தெரிந்தால், எடுத்து விடுங்களேன்...

Friday, February 10, 2006

அருமைத் தத்துவங்கள்

உலகமகா அறுவை தத்துவங்களின் தொகுப்பு...அடி விழாம் இருந்தா சரி:

1. பஸ்லே கலெக்டரே எறினாலும் முதல் ஸீட் என்னவோ கண்டக்டருக்குதான்.
2. உலகம் தெரியாம வளர்ந்தா அவன் வெகுளி - அதுவே கிரிகெட் தெரியாம வளர்ந்தா அவன் கங்குலி.
3. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ணலாம், ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா?
4. டிக்கெட் வாங்கி உள்ள போனா அது சினிமா ; உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்ரேஷன் தியேட்டர்...
5. சைகிள் காரியரில் டிபன் கொண்டு போகலாம் ஆனா டிபன் காரியரில் சைகிள் கொண்டு போக முடியாது.
6. ஆம்பிளைகளை கொண்டு போக ஆம்புலன்ஸ்...பொம்பளைகளை கொண்டு போக பொம்புலன்ஸ் கிடையாது...
7. புயலாலே கரையைக் கடக்க முடியும் ஆனா கரையாலே புயல கடக்க முடியுமா?